ஜூன், 2023 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2023

பிரிவு வார்த்தைகள்

ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்

நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது. 

வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன். 

ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.  

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது. 

அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது. 

நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார். 

அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம். 

வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.